சித்தூர் : சித்தூர் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் நடைபெற்று வந்த 21 நாட்கள் கொண்ட பிரமோற்சவத்தின் கடைசி நாளான நேற்று தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமிைய தரிசித்தனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில். இந்த கோயிலுக்கு மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கம். அனைத்து கோயில்களிலும் 10 நாட்கள் மட்டுமே பிரமோற்சவம் நடைபெறும். ஆனால், காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் மட்டும் 21 நாட்கள் பிரமோற்சவம் நடைபெறும். அது மட்டுமின்றி ஒவ்வொரு வம்சத்தினர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்திற்கு பூஜை செய்து வாகனத்தை ஊர்வலமாக தொடங்கி வைப்பது வழக்கம்.
அதன்படி, கடந்த மாதம் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையன்று கொடியேற்றத்துடன் வருடாந்திர பிரமோற்சவம் தொடங்கப்பட்டது. பிரமோற்சவத்தின் முதல் நாளான கடந்த 1ம் தேதி அம்ச வாகனம், 2ம் தேதி நெமிலி வாகனம், 3ம் தேதி மூஷிக வாகனம், 4ம் தேதி பெரிய தங்க சேஷ வாகனம், 5ம் தேதி சிலுக்க வாகனம் மற்றும் ருசிக வாகனம், 6ம் தேதி கஜ வாகனம், 7ம் தேதி ரத உற்சவம், 8ம் தேதி திருக்கல்யாணம் மற்றும் பிச்சாண்டி சேவை நடைபெற்றது.
9ம் தேதி கொடி இறக்கம் மற்றும் ஏகாந்த சேவை வடாயத்து உற்சவம் நடைபெற்றது. 10மட் தேதி அதிகார நந்தி வாகனம், 11ம் தேதி ராவண பிரம்ம வாகனம், 12ம் தேதி யாளி வாகனம், 13ம் தேதி விமான உற்சவம், 14ம் தேதி சூரியபிரபை வாகனம், 15ம் தேதி சந்திரபிரபை வாகனம், 16ம் தேதி காமதேனு வாகனம், 17ம் தேதி புஷ்ப பல்லக்கு சேவை, 18ம் தேதி கல்ப விருச்சிக வாகனம், 19ம் தேதி பூலங்கி சேவை நடைபெற்றது.
பிரமோற்சவத்தின் கடைசி நாளான நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து, தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் தெப்பக்குளத்தில் மூழ்கி விநாயகரை வழிபட்டனர்.
கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறு இல்லாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. காவல்துறையினர் பக்தர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் சிறப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மொத்தம் 21 நாட்கள் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் பிரமோற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.